ஞாயிறு, 17 ஜூலை, 2016

பெண் பார்க்கும் படலம்:-


(வேலை பார்க்கும் ஊரில் இருந்து பாட்டு கேட்டுகொண்டே சொந்த ஊர் பயணம், தூக்கத்திற்காக ஏங்கி பின் தள்ளாடும் நடையோடு பெண் பார்க்க சென்று பின் அவளை பிடித்ததும்)

வழி நெடுக வேடிக்கை
பயணம்
மாதம்தோறும் இனிக்கின்ற
தருணம்

இசை கேட்டு ஓயாத
செவிகள்
பிறர்பாட மனதில் ஓடும்
கவிகள்

தாமதமாய் வந்து சேரும்
தூக்கம்
இன்றேனும் கிடைக்குமோ என்ற
ஏக்கம்

வந்திறங்கிய வாசலினின்று
பெண்பார்க்க போகிறோமெண்று
சொன்னவர்கள் சோர்ந்துபோக
சிரித்தேன் கேலியாக

இருளோடு ஒளி சேரும்
நேரம்
தீரவில்லை இரு இமையின்
பாரம்

முகம் துடைத்து
அடி வைத்து
நகராத கால்களோடு
ஓயாமல் அடம்பிடித்து
பேருந்தில் பயணம் ஆனேன்
என் மறுபாதி தேடபோனேன்

கேள்விக்கு விடையாக
மௌனத்தின் மொழியாக
பார்வையால் அளவெடுத்தாள்
இந்த ஊமைக்கும்
மொழி கொடுத்தாள்

கள்ளம் அற்ற
அவள் பேச்சு
கிராமத்து வழக்கோடு
கலந்தமைந்த சொல்வீச்சு

புன்னகையில் மருந்து வைத்தாள்
என் நினைவில் கலந்துவிட்டாள்!


நான்:-



தனியாக நான் இருக்க
துணையாக என் நினைவு
நினைவுக்குள் கருவாக
மறுபடியும் என் வரவு

வரவேற்கும் ஞாலத்தின்
மெய்யான ஓர் உணர்வு
உணர்வுக்கு உணவாக
நான் என்ற ஓர் கனவு.

வெள்ளி, 15 ஜூலை, 2016

குங்பூ - உடலினை உறுதி செய் :-



1) குங்பூ என்னும் கலை:

குங்பூ என்னும் சொல் நாம் நினைப்பது போன்று சீன தற்காப்புக் கலையை குறிக்கும் சொல் அல்ல.


அதன் பொருள் மிக கடினமாக நாள்பட உழைத்து அடைந்த தனி திறமை, கல்வி போன்றவற்றை குறிக்கும்  சீனச்சொல். அது எந்த பிரிவிலும் இருக்கலாம், ஏன் சமயலாகக் கூட இருக்கலாம்.

உண்மையான சீன தற்காப்பு கலையை குறிக்கும் சொல் வூஷூ(wu-shu ) ஆகும். வெளிநாட்டினர் குங்பூ என்ற சொல்லையே தற்காப்பு கலையோடு
தொடர்பு படுத்தி அப்பெயரையே தற்காப்பு கலைக்கு சூட்டிவிட்டனர்.

இந்த கலையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவை ஷவ்ளின் வூஷு, வூடேங், விங் சன், தாய்ச்சி, சின்னா, இன்னமும் பல பிரிவுகள் உள்ளன.

இக்கலை மிகுந்த வீரியத்துடனும் மிக நுணுக்கமாகவும் கற்றுத்தருமிடம் ஷவ்ளின் டெம்பில் (Shaolin Temple). இக்கலையை பயில மிக குறைந்த வயது 6.
6 வயதுக்கு மேல் எந்த வயதிலும் இதை கற்றுக்கொள்ளலாம்.

இக்கலையை பயிலும் முன் தனி மனித ஒழுக்கம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மது, மாமிசம், பெண் போன்ற ஆசைகளை அறவே துறந்த பௌத்த மததினர்கே இக்கலை பயிற்றுவிக்கப்பட்டது.
 
முதலில் இந்த கலையை வெளிநாட்டினர் மற்றும் ஏனைய மதத்தினருக்கு  பயிற்றறுவிக்க தடை இருந்து வந்தது. பின்னர் அது காலபோக்கில் தளர்ந்து இப்பொழுது எல்லா நாட்டிலும் பயிற்றுவிக்க படுகிறது.

இந்த கலையை பயில்பவர்கள் பத்து சட்டங்களை தங்கள் மனதினுள் நிறுத்திட வேண்டும். அவை

1) குருவிடம் மிகவும் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். தன்னுடன் பயிலும் மாணவ மாணவியரை தன் சகோதரன் மற்றும் சகோதரியாக பாவிக்க வேண்டும்.


2) விடா முயற்சியுடன் இந்த கலையை பயில வேண்டும். அதற்குத் தேவையான உடல் மற்றும் மனபலத்தை பெற்றுருக்க வேண்டும்.

3) பெற்றோருக்கு ஏற்ற பிள்ளையாக இருக்க வேண்டும், மற்றும் வயதானவர்களுக்கு  உரித்தான மரியாதையும் சிறியவர்களுக்கு அரணாகவும் இருக்க வேண்டும்.

4) நீதியை எந்நாளும் நிலை நிறுத்த வேண்டும். தைரியமாகவும் புத்திசாலியாகவும் இருந்திட வேண்டும்.

5) நன்றி கெட்டவனாகவோ அல்லது நேர்மை இல்லாதவனகவோ இருக்கக்கூடாது.

6) ஒருபொழுதும் கற்பழிப்பு, பலவந்தபடுத்தல் , திருடுதல், பொய் பேசுதல், ஏமாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

7) தீயவர்களின் சேர்க்கையோ அல்லது தனக்கு தானே தீங்கு செய்வதோ மற்றும் தற்பெருமையோ அறவே கூடாது.

8) அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் கூடாது. ஒருபொழுதும் மக்களை ஒடுக்குதல் அல்லது கேளிசெய்தல் கூடாது.

9) மனிதாபிமானத்துடனும் கருணையுடனும் இருத்தல் வேண்டும். அமைதி மற்றும் சந்தோசத்தை பரப்புதல் வேண்டும்.

10) தகுதியான மாணவர்களுக்கே தீரமாகவும் மற்றும் தாராளமாகவும் இந்த கலையை பரப்புதல் வேண்டும்.


(தொடரும்)

சனி, 9 ஜூலை, 2016

ஞாபகம்:-



மறக்க முயற்சிக்கிறேன்
இறங்க மறுக்கிறாள்!
உறங்க முயற்சிகிறேன்
இமையை தூக்கிப் பிடிக்கிறாள்!


உண்ண முயற்சிகிறேன்
சுவாசமாக சென்று
உணவை தடுக்கிறாள்!

கடவுளே!
ஒன்றே ஒன்றை வரமாக
கேட்டேன்
"ஞாபகமறதியை"!
நீயோ, தந்து சென்றாய்

ஆனால்
நான் மறந்ததோ
"அவளை மறக்கவேண்டும்"
என்பதை.