சனி, 9 செப்டம்பர், 2017

தானறியா தவம்


பூ தோற்கும்
புன்னகையாள்!
தன்பூவிழி மூடி
உறங்குகிறாள்!
கண்ணுறங்கா
கரு வண்டாய்
அவள் கண் விழிக்க
காத்திருந்தேன்.

புவி மேற்கு
இடம் பார்த்து
உருண்டோட!
மேகங்கள் கிழக்காக
இடம் மாற!
இருள் அனைத்தும்
இருமாப்பில்
மேல் சாய!
மடி அறியா
குழந்தையாய்!
கண் அயர்ந்து
போனேன்.

கனவோடு
வந்த மர்ந்தாள்
கருத்தினில் மட்டும்!
காணும்
முனைப்போடு தேடுகிறேன்
பாதங்கள் நகரும் மட்டும்.

வார்த்தைகளும் புரண்டோட!
வந்த எண்ணம் தடுமாற!
தானறியா தவங் கலைதேன்.
எண்ணத்து ஏடுகளையும்
எழுதுகோலையும்
ஒருசேர நான் தொலைத்தேன்

வருந்தாத நொடி இல்லை
இனி வருந்தி பலனில்லை
விடியாத இரவொன்று
வருவதிலும் தவறில்லை

கன நேரக் கண்ணுறக்கம்
கண்டங்கள் தாவும் வரைக்கும்
கற்பனைச் சிறகு முளைக்கும்
என் கவியோடு செர்த்தினிக்கும்.

வெள்ளி, 2 ஜூன், 2017

மண்ணின் மைந்தர்கள்






வானம் முழுவதும்
இடி முழக்கம்!
தெறிக்கும் மின்னல்கள்
வீதி வரைக்கும்!
புன்னகை சிந்திய
வீர முழக்கம்!
சேர்த்து வைத்து
நிழல் படம் எடுக்கும்!

சுழலும் கம்புகளும் ,
காற்றை கீறும் அம்புகளும்,
உருவிய வாளும்,
ஊடுருவும் வேலும்,
பெண்டீர், பண்டிதரையும்
முதியோர், குழந்தைகளையும்
என்றும் தொட்டதில்லை.
பகைவரை என்றும் விட்டதில்லை.

வையம் போற்றும்
மண்ணின் வீரம்.
இன்று வைக்கபட்டதோ
சுவர்களின் ஓரம்..
போருக்கு நியதி
வகுத்தவர்கள் எல்லாம்
புறமுதுகில் குத்தும்
கயவர்கள் முன்னே
அஞ்சி நடுங்கிடும்
நிலைமையில் கண்டேன்

காதலும் இன்று
போதையாய் மாறும்
போதை மேலும்
தீராத மோகம்.
வஞ்சம் இன்று
வீரமாய் ஆகும்.
சூழ்சிகள் எல்லாம்
நீதியாய் போகும்.

விழுப்புண் இன்று
வெறும் விழும் புண்ணாய்
யாரிடம் சொல்ல
இது நம் மரபு அல்ல

போர்குணம் முழுவதும்
புழுதியில் போக
மிஞ்சிய வீரம்
நெருப்பினில் வேக
உறங்கியே வாழ்கிறோம்
உணர்சிகளை கொன்று
அடிமைகள் வாழும்
தேசத்தில் இன்று.